அதற்கு அவ்வமைப்பு சி.பி.எம்மின் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்து அவதூறு பரப்புகிறது.சி.பி.எம்மின் அறிவிக்கப்பட்ட கொள்கைகளான ஜனநாயக அரசியல் செயல்பாடு, வர்க்க வெகுஜன இயக்கங்களில் மக்களை திரட்டுவது, தற்காலிகமானதும் உடனடியானதுமான அரசியல் பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மத ஜாதி அமைப்புகளுக்கெதிராக நேரடி தாக்குதல் நடத்தாமலிருப்பது போன்றவைகளையும்,
நாடாளுமன்ற பங்கேற்பு, மாநில அரசுகளை தலைமை ஏற்று நடத்துவது அவ்வரசுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களை தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு வசதி செய்து கொடுப்பது போன்ற பொருளாதார கொள்கைகளையும் ம.க.இ.க தங்கள் வசதிக்கேற்ப வளைத்தும் திரித்தும் பிரச்சாரம் செய்து சி.பி.எம்மை "ஓட்டுபொறுக்கிகள்" "போலி கம்யூனிஸ்ட்கள்" என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை பரிசீலித்தோமானால் எதுவுமே உண்மை இல்லை என்பதும், அனைத்து குற்றச்சாட்டுகளும் யதார்த்த நிலைமைகளை உள்வாங்காமல் மேம்போக்காக ஆனால் தீவிர மன எழுச்சியின் காரணமாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு என்பதை உணர முடியும்.
நாடாளுமன்ற பங்கேற்பு:
இந்தியாவில் ஒப்பீட்டளவில் வலுவான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு நிலவுகிறது என்பதையும் தேர்தல்களில் மக்கள் பெருவாரியாக பங்களிப்பு செய்து தங்கள் வாக்களிக்கும் உரிமையை பயன் படுத்துகிறார்கள் என்பதையும் தீவிர இடது சாரி வேடமிடும் அமைப்புகள் காண மறுக்கின்றன. இந்தியாவில் மக்கள் பல்வேறுபட்ட பண்பாட்டு கலாச்சார தளைகளுக்குள் ஆழ்ந்து கிடப்பதுடன் ஆழமான ஜாதி கட்டமைப்பில் சிக்குண்டு மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
இவற்றிலிருந்து விடுபட வேண்டுமெனில் நிலப்பிரபுத்துவத்தை உடைத்து நிலச்சீர்திருத்தம் செய்வது முக்கியமான கடமையாகும் என்பதை உணர மறுக்கிறார்கள்.ஒரு சோஷலிச அமைப்பில் செய்யமுடிகிற கடவுள்மறுப்பு ஜாதி ஒழிப்பு போன்றவைகளை முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் செய்ய வேண்டுமென்று அடம்பிடிக்கிறார்கள் இந்த தீவிர இடதுசாரி வேடதாரிகள்.
நாடாளுமன்றத்தை பன்றித்தொழுவம் என்று தோழர்.லெனின் குறிப்பிட்டதை கெட்டியாக பிடித்துக்கொண்டு நாடாளுமன்ற பங்களிப்பை புறம்தள்ளி, ஆயுத போராட்டத்திற்கு உடனடியாக மக்களை திரட்ட வேண்டுமென்றும் கிராமங்களிலிருந்து புரட்சி செய்து நகரங்களை நோக்கி வந்து அரசை கைப்பற்ற வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் மக்கள் வர்கங்களாக பிரிந்து இயங்காத நிலைமையில், மூட நம்பிக்கைகளில் முடங்கி விதியை நம்பும் சூழலில் எப்படி மக்களை ஆயுத போராட்டத்திற்கு திரட்டுவது என்பது பற்றி வினா எழுப்பினால் அதற்கு பதிலில்லை.
நாடாளுமன்ற அமைப்பை நம்பி அதன் மூலம் முதலாளித்துவ அரசு கொடுக்கும் சில சலுகைகளை பெற்று வாழ்க்கையை ஓட்டும் அப்பாவி பொதுமக்கள் இவர்களின் வரட்டுத்தனமான சித்தாந்த மற்றும் தத்துவார்த்த மேற்கோள்களை கேட்டு எதுவுமே புரிபடாமல் அஞ்சி நடுங்கி ஒதுங்கியே நிற்கிறார்கள்.
மத தீவிரவாதிகள் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் காலகட்டத்தில் இந்த தீவிர இடதுசாரி வேடதாரிகள் தங்கள் பிரச்சாரங்கள் மூலம் மக்களை மத தீவிரவாத அமைப்புகளில் சென்று தஞ்சமடையும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.
ஹிந்து மத நம்பிக்கை கொண்ட சாதாரண ஜனங்களை ஆர்.எஸ்.எஸ் ஐ விட்டு வராமல் செய்கின்ற அளவு அவர்களின் கடவுள் மத நம்பிக்கைகளை கொச்சை படுத்தியும் கேவலப்படுத்தியும் இயக்கம் நடத்துகிறார்கள்.
இதன் மூலம் ஜனநாயக எண்ணம் கொண்ட இந்துக்களை தீவிர இந்துத்துவா அமைப்புகளுக்குள் தள்ளிவிடும் வேலையை செய்து ஏகாதிபத்திய தாசர்களாக மாறி இருக்கிறார்கள்.
பிற்படுத்தபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் தான் மற்ற மக்களுக்கு வேலை கல்வி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற ஆர்.எஸ்.எஸ். இன் கருத்துக்கு இவர்கள் ஆதரவானவர்களாக இருக்கிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தை கைப்பற்றும் அளவுக்கு தீவிர இந்துத்துவ வாதிகள் வளர்ந்திருக்கிறார்கள், இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்ற அமைப்பை பயன்படுத்தி யதார்த்தமான மக்கள் பிரச்சனைகளை பிரச்சாரங்கள், போராட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசெல்வதை தவிர வேறு மாற்றுவழி இன்று இல்லை.
ஏனெனில் புரட்சிகர இயக்கங்களின் வலிமை என்பது முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் வலிமையுடன் ஒப்பு நோக்கினால் மிகவும் வலுவற்றதாகவே இருக்கிறது. ஆயுத போராட்ட அனுபவம் என்பது இந்தியாவில் ஏற்கனவே உண்டு. தெலுங்கான போராட்டம் எப்படி ஒடுக்கப்பட்டது அரசு பயங்கர வாதம் எப்படி புரட்சிகர அமைப்புகளை நசுக்கியது என்பதை நாம் மறக்க முடியாது.
இந்தியாவில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வதற்கு ரன்வீர்சேனா,சல்வாஜுடும்,ஆனந்த மார்க்கம், ராமசேனா, பஜ்ரங்க்தள் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகளை நிலப்பிரபுக்களும், வகுப்புவாதிகளும் அவர்களின் மாநில அரசுகளும் ஏற்படுத்தி அப்பாவிமக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.
ஒரிசாவில் விஸ்வஹிந்து பரிசத்தின் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் சுட்டுகொன்றதை அடுத்து காண்டமால் மாவட்டத்திலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் வகுப்புவாத கும்பல் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை படுகொலை செய்தும், அவர்களின் வீடுகள் மற்றும் உடைமைகளை தீக்கிரையாக்கி அம்மக்களை அகதிகளாக்கியும், கன்யாஸ்திரீகள் உட்பட பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் கலவரக்காடாக்கிய கொடுமை நிகழ்ந்தது.
இவர்கள் எதிரிகளில் ஒருவரை தாக்கும் பொது எதிரிகளின் தாக்குதலுக்கு நூற்றுக்கணக்கானோர் ஆட்படுத்தப் படுகிறார்கள். இதுதான் இவர்களின் ஆயுத புரட்சியின் (அ) ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் பலனாக சாதாரணமக்களுக்கு கிடைப்பது. இது பீகார், சத்தீஸ்கட், ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களிலிருந்தும் காணக்கிடைக்கிறது.
ஆனால் சி.பி.எம் தொடர்சியான ஜனநாயக இயக்கங்கள் மூலம் மக்களை திரட்டி போராடுவதனால் ஏழை மக்களின் வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சில பல நிவாரணங்கள் ஏற்படுத்த முடிந்ததோடு இடதுசாரி அமைப்புகளின் பால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடிந்துள்ளது.
மேலும் இந்தியாவின் மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களில் தொடர்சியாக ஆட்சியிலிருப்பதுடன் கேரளாவிலும் ஆட்சியை பிடிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான்,பீகார்,பஞ்சாப்,ஒரிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தவிற்கமுடியாத சக்தியாக வளர்ந்துள்ளது.
கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்கையை உத்தரவாத படுத்தும் விதமாக இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவு மக்கள் நல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது.
இந்தியாவை போன்ற அரை நில பிரபுத்துவ அரசமைப்பு கொண்ட தேசத்தில் விவசாய வளர்சியில் ஒரு மாநில அரசு செய்ய முடிகிற பணிகளில் எண்பது சதவீத பணிகளை நிலச்சீர்திருத்தம், பென்ஷன் திட்டம் உட்பட செய்து முடித்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளிகளின் வாழ்க்கை பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.
மத்திய அரசாங்கம் மாநில இடதுசாரி கூட்டணி அசாங்கங்க்களை முடக்கி செயலிழக்க வைக்கும் விதமாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் துவங்க உதவ மறுப்பது , மாநில அரசின் திட்டங்களை முடக்குவது போன்ற மக்கள்விரோத செயல்களில் ஈடுபடுகிறது.
உலகமயமாதல் அமலுக்குவந்தது அதன் காரணமாக தனியார்மயமாதலும், வேலையில்லா திண்டாட்டமும், சமூக பாதுகாப்பற்ற வேலை சூழலும் உருவானது. இன்னொருபுறம் மாநில அரசாங்கங்கள் தனியார் உதவியுடன் தொழில் தொடங்கும் உரிமம் பெற்றது, லைசன்ஸ் முறை ரத்து செய்யபட்டது போன்ற சில நன்மைகளும் ஏற்பட்டன.
இதனை பயன்படுத்தி தொழில் தொடங்கும் முயற்சிகளில் இடதுசாரி மாநில அரசுகளும் ஏற்படலாயின. இம்முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறியும் நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், மக்கள் விரோத ஊடகங்களும் செய்துவருகின்றன. இவர்களுடன் தீவிர இடதுசாரிகளாக தங்களை காட்டி கொள்ளும் நக்சல் மாவோவாதிகளும் இணைந்து அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள ம.க.இ.க வும் சி.பி.எம் முக்கெதிராக பொய்பிரச்சாரத்தில் பிற்போக்கு வாதிகளுடன் இணைந்து அவதூறு பரப்பி வருகிறது.
தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகிய செல்லப்பெயர்களில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைய செய்வது, மக்கள் நல திட்டங்களிலிருந்து அரசின் பங்களிப்பை இல்லாமல் செய்வது, பெரும் பணக்காரர்களை வாழவைக்கும் திட்டங்களை கொண்டுவருவது போன்ற பணிகளை செய்துவருகிறது.
ஆனால் இடதுசாரி கூட்டணி மாநில அரசாங்கங்கள் பொதுத்துறையை பாதுகாத்துக்கொண்டும், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டுமே தனியார் முதலீட்டை தங்கள் மாநலங்களில் ஊக்கப்படுத்துகின்றன. வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிப்பதில் அத்தொழில் நுட்பம் இந்தியாவில் இல்லை என்கிற நிலையில் தவிர்க்க முடியாத கட்டத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்வது என்பதை கொள்கையாக கொண்டுள்ளன.
சி.பி.எம் தனது பத்தொன்பதாவது அகில இந்திய மாநாட்டில் இப்பிரச்சனைகள் குறித்து சரியான கொள்கை விளக்கத்தை விவாதித்து ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன்படி இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தொழில் வளர்சிக்காக பொதுத்துறை, உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களை அரசுகள் நாடின.
இதன் ஒருகட்டமாக மேற்குவங்க மாநிலத்திலுள்ள நந்திகிராமில் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணியை மாநில அரசு செய்தது, நிலத்துக்கு ச்சொந்தமானவர்களுக்கு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி இந்தியாவில் எந்த மாநில அரசும் இதுவரை அறிவித்திராத மறுவாழ்வுத்திட்டங்களையும் அறிவித்தது. ஆனால் திரணமூல் காங்கிரசின் மறைமுக ஆயுத, பண உதவியுடன் நக்ஸல்வாதிகள் மக்களில் சிலரை தூண்டிவிட்டு குழப்பம் விளைவித்தனர். அதன் காரணமாக தவறான வழிகாட்டுதலுக்குள்ளான மக்கள் அரசின் திட்டத்திற்கெதிராக திரண்டனர். உடனே மாநில அரசு மறுபரிசீலனை செய்து மக்களுக்கு விருப்பமில்லாத எந்த திட்டமும் கட்டாயப்படுத்தி அமுல் படுத்த படாது என அறிவித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியை நிறுத்திவைத்தது.
ஆனால் இப்பிரச்சனையை கையிலெடுத்துக் கொண்ட திரனமூல் காங்கிரஸ் நக்சல்கள் மற்றும் இந்து,முஸ்லிம் வகுப்புவாதிகளை சேர்த்து போராட்ட அறிவிப்புகள் செய்ததோடு மாநில அரசை நிலைகுலைய செய்யும் விதமாக வதந்திகள் பரப்பி மக்களை தூண்டிவிட்டு அச்சமூட்டி வந்தனர். சிலமாதங்கள் கழித்து மிட்னாபூர் மாவட்டத்தையே கலவரக்காடக மாற்றியதோடு மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அம்மாவடத்தை துண்டித்து சி.பி.எம் தோழர்களை படுகொலை செய்தும், சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை தகர்த்தும் அக்கிரமச் செயல்களில் ஈடுபட்டனர்.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விதமாக காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு நடவடிக்கையில் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அவதூறுபரப்பும் நோக்குடன் தமிழகத்தில் ம.க.இ.க இணையத்தில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஆனால் மக்கள் மத்தியில் உண்மையை விளக்கி சி.பி.எம் அதனை முறியடித்தது.
அதை போல சிங்கூரில் டாட்டா தொடங்க இருந்த இந்தியாவிலேயே மிக குறைந்த விலை காரான நானோ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியையும் பிற்போக்குவாதிகள் தடுத்ததுடன், அரசு முயற்சியை கைவிட்டது. இன்றைக்கு அத்தொழிற்சாலை குஜராத்தில் செயல்படுகிறது.
இடதுசாரி அரசுகள் நிலையானதும் தூய்மையானதுமான ஆட்சியை வழங்கிவருகின்றன, எந்த ஊழல் குற்றசாட்டும் சுமத்தமுடியாமல் பிற்போக்காளர்களை தோற்கடித்து வந்த ஆட்சியினை கவிழ்க்க மக்களை தூண்டி விட்டனர்.
இடதுசாரிகள் தொழிற்சங்கம் அமைத்து போராட்டம் நடத்தி தொழில வளர்சியை முறியடிப்பார்கள் என்று பிரச்சாரம் செய்துவந்த முதலாளித்துவ கட்சிகளும், அவற்றின் ஊதுகுழல்களான ஊடகங்களும் தங்கள் முகமூடி மக்கள் முன் அவிழும் என்கிற நிலை வந்ததும் அவர்களே தொழில் மூலதன திட்டங்களை முடக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.